விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவொருக்கு மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சிறந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் அழைத்து வரப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வரும் நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக மாணவர்கள் தேர்வு முறைகள் குறித்து அறியும் வகையில், தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் பயிற்சி மையத்துடன் இணைந்து மாவட்ட மைய நூலகத்திலேயே மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையன்று முதல் மாதிரித் தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன், நூலகர்கள் இளஞ்செழியன், பெரியசாமி, முருகன், பயிற்சியாளர் பாலசங்கர் உள்ளிட்டோர் கண்காணித்தனர். இதேபோன்று வரும் நவம்பர் முதல் வாரம் வரையில் 7 தேர்வுகள் நடைபெறும் என்றும், மாதிரித் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவோருக்கு புத்தகங்களை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.