கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் காவலாளியை தாக்கியதாக 3 இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சங்கராபுரம் வட்டம், லா.கூடலூரை அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கலைச்செல்விக்கு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அதனை பார்ப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த கலியன் மகன் ஏழுமலை (22), முத்து மகன் அரசன் (23), ராமர் மகன் செல்வம் (19) ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனர்.
அங்கு காவலாளியாக இருந்த கள்ளக்குறிச்சியை அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி, பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மூவரும் சிவசக்தியை திட்டியதுடன், மகப்பேறு பிரிவில் பரிசோதனை செய்து கொண்டிருந்த மருத்துவர் மதுமிதாவை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் மூவரையும் கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.