தாது உப்புக்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்க்கும் வழிமுறைகளும்!

தாது உப்புகளின் பற்றாக்குறையால் கால்நடைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி
தாது உப்புக்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்க்கும் வழிமுறைகளும்!

திண்டுக்கல்: தாது உப்புகளின் பற்றாக்குறையால் கால்நடைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின்(திண்டுக்கல்) தலைவர் வெ.பழனிச்சாமி, உதவி பேராசிரியர்கள் ரா.ரம்யா, எம்.தாஸ்பிரகாஷ் ஆகியோர் கூறும் ஆலோசனைகள்:
கால்நடைகளின் உடலில் சுமார் 25 சதவீதம் தாது உப்புகள் உள்ளன. கால்நடைகளுக்கான தாது உப்புகளின் தேவை நாள்தோறும் குறைந்த அளவாக இருந்தாலும், அந்த தேவையை பூர்த்தி செய்யாவிட்டால், பற்றாக்குறையினால் நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கால்நடைகளின் உடல்வளர்ச்சி இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திதிறன் ஆகியவற்றுக்கு தாது உப்புக்கள் முக்கியத் தேவையாக இருக்கின்றன. கால்நடைகளுக்கு அளிக்கும் கலப்புத் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் மூலம் தாது உப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன. பசும்புற்கள், உலர்தீவனங்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் தன்மை மற்றும் மண்ணின் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப தாவரங்களுக்கு சென்றடைந்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு தாது உப்புகள் கிடைக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் மற்றும் கோபால்ட் ஆகியன கால்நடைகளுக்குத் தேவையான முக்கிய தாதுப்புகள் ஆகும்.
தாது உப்புக்களின் பயன்பாடு: தசை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. தசைகளிலும் உடலின் ரசாயன நீர்களிலும், காரஅமிலத் தன்மையை நிலை நிறுத்தப் பயன்படுகிறது. தோல். கால்குளம்புகள் மற்றும் கொம்புகளின் வளர்ச்சிக்கும் தேவையாக உள்ளன. எலும்புகளிலும், இருதயத் தசைகள் மற்றும் முக்கியத் தசைகளிலும் முக்கியப் பொருளாக பயன்படுகிறது. நொதிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் உற்பத்திக்கு இன்றியமையாததாக உள்ளன. நிணநீர் மற்றும் ரத்தின் நடுநிலைத்தன்மையை காக்க உதவுகிறது. 
நரம்பு மண்டல வேலைப்பாடு ஊக்குவிப்பு மற்றும் ரத்த உறைதலுக்கும், தீவனப் பொருள்கள் செரிமானம் மற்றும் சத்துக்கள் உறிஞ்சுதலுக்கும், கால்நடைகளின் சினைப்பருவ சுழற்சிக்கும், விந்து உற்பத்திக்கும், பால் சுரப்புக்கும், தாது உப்புக்களின் தேவை அவசியம்.
அவசியம்: தாமிரம், துத்தநாகம், கோபால்ட், இரும்பு, மாங்கனீசு, அயோடின், செலீனியம் போன்ற தாதுக்கள் கால்நடைகளுக்கு மிகக்குறைந்த அளவே தேவைப்படுகின்றன. இந்த தாதுக்கள் அனைத்தும் கால்நடைகளில் இனைப்பெருக்கத்திற்கு பெரிதும் தேவைப்படுகின்றன. இத்தாதுக்கள் அனைத்தும் உடலில் உள்ள பல வகையான நொதிப்பொருட்களை ஊக்குவித்து அவற்றின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கின்றன. இத்தாதுக்களின் பற்றாக்குறை ஏற்படின் நொதிப் பொருள்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள்: கால்நடைகளின் முழுவளர்ச்சி பாதிக்கப்படும். குட்டி ஈன்ற கால்நடைகளின் பால் உற்பத்தி குறையும். கால்நடைகள் சீரான இடைவெளியில் சினைக்கு வராமை மற்றும் சினை தரிக்காமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சினையான கால்நடைகள் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில், குட்டிகள் இறந்து பிறக்கவும் வாய்ப்புள்ளது.
நுண்தாது உப்புகளால் உண்டாகும் நன்மைகள்: கால்நடைகளின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். ஆரோக்கியம், இனப்பெருக்கத்திறன் மேம்படும். திரட்சியான கன்று பிறக்கும். கால்நடைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன் பெருகும். கால்நடைகளின் உடலில் எலும்பு வளர்ச்சிக்கு ஏதுவாகும். தீவனத்திலுள்ள சத்துப் பொருள்கள் முறையாக பயன்படுத்தப்படும். பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படும். 15 முதல் 18 மாத இடைவெளியில் மீண்டும் கன்று ஈனும் திறன் அதிகரிக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், தாது உப்பு கலவை கிலோ ரூ.45 விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். அலுவலகத்தை 0451-2460141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com