கோடையில் அதிக லாபம் தரும் தர்பூசணி

வரும் கோடை காலத்தில் நல்ல விலை போகும் தர்பூசணிகளைப் பயிரிட தற்போதுதான் தருணம் என்றும், வேளாண் துறையினரின் ஆலோசனைப் பெற்று
கோடையில் அதிக லாபம் தரும் தர்பூசணி

அரக்கோணம்: வரும் கோடை காலத்தில் நல்ல விலை போகும் தர்பூசணிகளைப் பயிரிட தற்போதுதான் தருணம் என்றும், வேளாண் துறையினரின் ஆலோசனைப் பெற்று விவசாயிகள் தர்பூசணியை இப்போது விதைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் வேளாண்மை துறை சோளிங்கர் வட்டார உதவித் தோட்டக்கலை அலுவலர் வாசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கோடைக்காலத்தில் தர்பூசணி பழத்துக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளுக்கு ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மற்றும் கடப்பா மாவட்டப் பகுதிகளில் இருந்து வரும் தர்பூசணிகள் தேவையை நிறைவேற்றும். அதேகாலத்தில் இந்த மாவட்டங்களிலேயே பயிரிடப்பட்டு விற்பனைக்கு வரும் தர்பூசணிகளும் ஆந்திர மாநில பழங்களைப் போல் அதிக விலைக்கு வாங்கப்படும். எனவே, தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிசம்பர், ஜனவரி மாதங்களான தற்போது தர்பூசணியை விதைக்கலாம். இப்போது விதைக்கப்படும் தர்பூசணி, கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் விற்பனைக்கு வரும்.
தர்பூசணியில் நியூ ஹாம்ஷயர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷா அஜயமாட்டோ, பெரியகுளம்-1, அர்கா, மானிக், அர்காராஜஹன்ஸ், துர்காபுராமீதா, கேசர், அர்கா ஜோதி, பூசா, பேதனா, அம்ருத், பிகேஎம்-1 ஆகிய ரகங்கள் உள்ளன. அவற்றில் தமிழக வெயில் சூழ்நிலைக்கேற்றவாறு வளரக்கூடிய தர்பூசணி ரகம் பிகேஎம்-1 ஆகும். இந்த ரகங்கள் பழங்கள் பெரிதாகவும், அடர்பச்சை நிறம் கொண்டதாகவும், உள்ளே சதைப்பகுதி இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கும். மகசூல் ஹெக்டேருக்கு 122 முதல் 135 நாள்களில் 36 முதல் 38 டன் கிடைக்கும்.
இந்த வகை தர்பூசணிக்கு மணல் கலந்த இருமண்பாட்டு நிலம் மிகவும் உகந்தது. அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத்தன்மை, நல்ல சூரிய வெளிச்சத்துடன் உள்ள தட்பவெப்பம் பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்பநிலையில் விதைகள் முளைப்பது குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சி அடையும் பருவத்தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங்களில் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைபடும்.
தர்பூசணிக்கு நிலத்தை அதற்கேற்றவாறு தயாரிப்பது முக்கியம். நிலத்தை 3-இல் இருந்து 4 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் நன்கு கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலமுள்ள வாய்க்கால்கள் அமைத்திட வேண்டும். இந்த வாய்க்கால்களின் உட்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45:45:45 செ.மீ. நீள அகல ஆழ அளவில் குழிகள் தோண்ட வேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல்மண் மற்றும் தொழுஉரம் ஆகியவற்றுடன் ரசாயன உரங்களை கலந்து இட வேண்டும். தர்பூசணிக்கு ஒரு ஹெக்டேருக்கு தழை, மணி, சாம்பல் சத்து முறையே 200:100:100 கிலோ இந்த அளவை பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். 
ஒரு ஹெக்டேருக்கு விதைக்க சுமார் 3-4 கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4-5 விதைகளை பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்துவிட வேண்டும். பருவமழைக் காலங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யலாம். கோடை காலத்துக்கு அறுவடை செய்யும் பயிரை பாசனப் பயிராக பயிர் செய்யலாம். மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்ய வேண்டும். இறவையில் விதைப்பதற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றி பின்னர் 7-10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்து வந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர்பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ச்சுதல் ஒரே சீரான இடைவெளியில் செய்ய வேண்டும். (சுமார் 10 நாள்களுக்கு ஒரு முறை) அதிக நாள்களுக்கு நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்கு போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்து விடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்து போக வாய்ப்புள்ளது. 
விதைத்த 15 மற்றும் 30-ஆம் நாள்களில் களைக்கொத்து கொண்டு கொத்தி களைநீக்கம் செய்ய வேண்டும். விதைத்த 15-ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும் போது) டிபா என்ற பயிர்ஊக்கியை 26.50 பிபி எம் என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். (25-50 மி. கிராம் / ஒரு லிட்டர் / தண்ணீருக்கு அல்லது 250 மி கிராம், 500 மி கிராம், 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கரைக்க வேண்டும்) மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒரு முறை தெளிக்க வேண்டும்.
இதற்கு பதிலாக எத்ரல் பயிர் ஊக்கியை (2 மி.லி மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து) முதல் இரண்டு இலைப்பருவம், ஒரு வாரம் கழித்து, மேலுரம் ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்க வேண்டும். கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப்பகுதியில் படரச் செய்ய வேண்டும். விதைத்த 30-ஆம் நாள் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். இதற்கு குழி ஒன்றுக்கு 13 கிராம் யூரியா இட வேண்டும். 
இப்பயிருக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பையும் நன்கு கவணிக்க வேண்டும். வண்டுகள் இருந்தால் அவைகளை கட்டுப்படுத்த நனையும் செவின் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். சாம்பல் நோய் தென்பட்டால் நனையும் கந்தகத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈக்கள் காணப்பட்டால் இவற்றை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை உபயோகப்படுத்தலாம். 
அறுவடைக்கான அறிகுறியாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. நன்கு முற்றிப் பழுத்த பழத்தை விரலால் தட்டிப் பார்க்கும் போது ஒரு மந்தமான ஒலி உண்டாகும். பழத்தில் தரையை தொட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும். கொடியில் பழத்தின் அருகில் உள்ள பற்றிய படரும் கம்பிச்சுருள் காய்ந்து விடும். பழங்களை கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும் போது அப்பகுதி எளிதில் உடைந்து நொறுங்கும். சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து 30-40 நாள்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். பழங்கள் முற்றி பழுத்தவுடன் மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஹெக்டேருக்கு 25-30 டன்கள் மகசூல் கிடைக்கும். 
தர்பூசணியை பொருத்தவரை விற்பனைக்காக தொலைதூரச் சந்தைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள நகரங்களிலேயே வியாபாரிகள் நல்ல விலைக்கு தர்பூசணியை கொள்முதல் செய்து கொள்வார்கள். இப்பயிர் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்துறையின் கீழ் இயங்கும் தோட்டக் கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம். தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர்கள், இத்துறை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை அளிப்பார்கள் என்று சோளிங்கர் வட்டார உதவி தோட்டக் கலைத்துறை அலுவலர் வாசு தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com