நாற்று நடவில் புதியமுறை மூலம் கரும்பு சாகுபடியை பெருக்க முயற்சி!

நாற்று நடவில் புதியமுறையை பின்பற்றுவதன் மூலம் கரும்பு சாகுபடி உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேளாண்மைத் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
விவசாயி ஒருவரின் தோட்டத்தில் செம்மைக் கரும்பு சாகுபடியை ஆய்வு செய்கிறார் கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி.
விவசாயி ஒருவரின் தோட்டத்தில் செம்மைக் கரும்பு சாகுபடியை ஆய்வு செய்கிறார் கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி.


கோபி: நாற்று நடவில் புதியமுறையை பின்பற்றுவதன் மூலம் கரும்பு சாகுபடி உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேளாண்மைத் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகளுக்கு லாபகரமானதும், அதிக பிரச்னை இல்லாததுமான பயிராக கரும்பு விளங்குகிறது. கரும்பின் முக்கிய விளைபொருளான சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. சர்க்கரை நுகர்வில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் கரும்பு மகசூல் திறனில் முதலிடம் வகிக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருளாக சர்க்கரை இருப்பதால் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பின் அதிகபட்ச உற்பத்தித் திறன் ஏக்கருக்கு 132 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரி மகசூல் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரும்பில் புதிய ரகங்கள் அறிமுகம், அதிக இடைவெளியில் நடவு, சொட்டு நீர்ப் பாசனம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், நவீன உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் செம்மை கரும்பு சாகுபடி எனப்படும் ஒருவிதைப்பருசீவல் நாற்று முறையாகும். இது நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்றும் கூறப்படுகிறது.
நாற்று நடவு முறை: வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் இருபருக்கரும்பு கரணைகளை நடுகிறார்கள். இதிலிருந்து 60 ஆயிரம் கரும்பு பயிர்கள் தோன்றி ஒரு கணுவுக்கு 2 கரும்புகள் விளைந்து அதில் ஒரு கரும்பு ஒரு கிலோ எடை எனக் கணக்கிட்டால் ஏக்கருக்கு120 டன் கரும்பு மகசூல் கிடைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதில் 3 இல் ஒரு பங்கு மகசூல்தான் கிடைக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், போதிய பயிர் எண்ணிக்கை இல்லாததுதான் முக்கிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த நவீன கரும்பு நாற்று முறை மூலம் இந்த குறைபாடு தவிர்க்கப்படுகிறது.
இம்முறையின் மூலம் விதை நாற்றுகள், குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி சரியான அளவு ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெறலாம். கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு நாற்றங்கால் அமைத்து ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மேட்டூர், கொளத்தூர் போன்ற இடங்களுக்கு லட்சக்கணக்கில் கரும்பு நாற்று விநியோகம் செய்து வரப்படுகிறது. 
இதுகுறித்து, முன்னோடி விவசாயி ஒருவர் கூறியதாவது:
கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறேன். ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறேன். நிழல் வலைக்கூடம் அமைத்து நன்கு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டுதான் இந்த நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு ரூ. 1.60 வசூலிக்கிறேன். இது தவிர போக்குவரத்து செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். கரணையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் எண்ணிக்கை வேண்டும். ஆனால், இந்த முறையில் 5 முதல் 6 ஆயிரம் நாற்றுகள் போதுமானது . பார்களில் 5 அடி இடைவெளி தேவை. இந்த முறையில் கரும்பு கரணையில் உள்ள பருக்கள் வெட்டுக் கருவி மூலம் அப்படியே சீவி எடுக்கப்பட்டு தேங்காய் நார்க் கழிவுகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் ஊன்றப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. 25 முதல் 30 நாள்கள் ஆனதும் 4 முதல் 6 இலைகள் வளர்ந்திருக்கும். சாதாரண முறையில் 2 மாதங்களில் கிடைக்கும் வளர்ச்சி இந்த முறையில் ஒரே மாதத்தில் கிடைத்து விடுகிறது. இந்த நிலையில் நன்கு வளர்ந்துள்ள பயிர்களை எடுத்து நடவு செய்துவிடலாம். இதன் மூலம் குறைந்த நாள்களில் அதிக அளவு முளைப்புத் திறன் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 100 டன்கள் வரை மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
இந்த புதிய முறை நாற்று உற்பத்தி குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:
ஒரு பரு கரும்பு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து, நாற்றுகளைப் பாதுகாப்பாக வளர்த்து, நடவு செய்யும் இம்முறை கரும்பு உற்பத்தியில் பெரும் புரட்சியை உருவாக்கியுள்ளது. சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் விதைப் பருக்கள் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இந்தப் புதிய முறையில் 5ஆயிரம் நாற்றுகள் மட்டுமே நடவு செய்யப்படுகிறது. அதிக இடைவெளியில் நடப்படுவதால் காற்றும், சூரிய ஒளியும் பயிர்களுக்கு இடையில் நன்கு ஊடுருவுகிறது. ஒரு பார் விட்டு ஒரு பார் நீர் பாய்ச்சுதல், சொட்டு நீர்ப்பாசனம் போன்ற உத்திகளை இதில் பயன்படுத்துவதால் 40 சதவீதம் பாசன நீர் சேமிக்கப்படுகிறது. பார்களின் இடைவெளியில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் களைகளையும் கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு விதைக் கரணைகள் 4 டன்களுக்கு பதிலாக இந்தப் புதிய முறையில் விதை சீவல்களின் எடை வெறும் 50 கிலோ என்பதால் விதைக் கரணைகளுக்கான போக்குவரத்து செலவும் வெகுவாகக் குறைகிறது. ஒரு பயிரிலிருந்து 15 முதல் 20 கிளைப்புகள் தோன்றுவதால் மகசூல் இரட்டிப்பாக வாய்ப்பு ஏற்படுகிறது. நடப்பு மார்கழி தை பட்டத்துக்கு கோ 86032, கோ 99004, கோ 94008, கோ 94077 ஆகிய ரகங்களைசாகுபடி செய்யலாம். இதில், கோ 86032 ரகம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் மொத்த கரும்பு சாகுபடி பரப்பில் 79 சதவீதம் பரப்பளவில் இந்த கோ 86032 ரகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ஒரு பரு கரும்பு நாற்றுகள் நடுவதற்கு ஹெக்டருக்கு ரூ. 9,000 மானியமும், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் அமைப்பதற்கு சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்தார்.
இந்த புதிய தொழில்நுட்ப அறிமுக முயற்சிகளின் விளைவாக 30 முதல் 100 சதவீதம் வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுவதால் விவசாயிகளின் வருமானம் மேம்பட்டு வாழ்வாதாரம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com