5 மாநில தேர்தல் முடிவுகள் கூட்டணி அரசைபலப்படுத்தியுள்ளது: மஜத
மாநிலங்களில் வெளியாகியுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் கூட்டணி அரசை பலப்படுத்தியுள்ளதாக மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 5 மாநில தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக விளங்குகிறது. மக்களவைத் தேர்தலிலும் கர்நாடகத்தில் மஜத, காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியில் அலை ஓய்ந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. பிரதமர் மோடி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீதும், மோடியின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி காப்பாற்றிக் கொள்ள தவறிவிட்டார். அதன் விளைவாக 5 மாநிலங்களிலும் மக்கள் பாஜகவை நிராகரித்துள்ளனர். 5 மாநில தேர்தல் முடிவுகள் கூட்டணி அரசை பலப்படுத்தியுள்ளது என்றார்.