பெங்களூருவில் மறைந்த மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் உடலுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
கடந்த பல மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், பெங்களூருவில் திங்கள்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பெங்களூரு, பசவனகுடி, லால்பாக் சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அனந்த்குமாரின் உடலுக்கு அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, பெங்களூருவுக்கு திங்கள்கிழமை தனி விமானம் மூலம் இரவு 8.30 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடி, நேராக அனந்த்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
அங்கு, எச்.என்.அனந்த்குமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆளுநர் வஜுபாய்வாலா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா ஆகியோர் உடனிருந்தனர். அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி, மகள்கள் ஐஸ்வர்யா, விஜேதா ஆகியோருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக எச்ஏஎல் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் புதுதில்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் குமாரசாமி, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் வரவேற்றனர்.