கோலார் தங்கவயலில் தொடர்ந்து ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோலார் தங்கவயலில் சமீப காலமாக தொடர்ந்து மின்தடை செய்யப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் 1 மணி முதல் 2 மணி நேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், சில பகுதிகளில் பழுது காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து புகார்கள் வந்தாலும், பெஸ்காம் ஊழியர்கள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் மாணவர்கள், வணிகர்கள், சிறு, குறு தொழில்முனைவோர் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெஸ்காம் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆண்டர்சன் பேட்டை, சாம்பியன் மற்றும் அதை அடுத்துள்ள கிராமப் பகுதிகளுக்கு பெஸ்கம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.அந்த துணை மின்நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். பழுது நீக்கப்பட்டவுடன் கோலார் தங்கவயலில் மின் விநியோகம் சீராடையும் என்றார்.