ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக 2 பொறியாளர்கள் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டம், ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், கல்கேரி கிராம பஞ்சாயத்தில் ரூ. 40 லட்சத்திற்கான வளர்ச்சிப் பணிகள் செய்வதற்கான வரைவு செயல்திட்டத்திற்கான அனுமதி கோரி, கொப்பள் பஞ்சாயத்துராஜ் அலுவலகத்தை அணுகினார்.
அதற்கு அனுமதி வழங்க, செயற்பொறியாளர் சங்கர் மளகி, உதவிப்பொறியாளர் முதலைமணி ஆகியோர் ரூ. 10 ஆயிரத்தை வழங்குமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்பு படையில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிந்த லஞ்ச ஒழிப்பு படையினர், செயற்பொறியாளர் சங்கர் மளகி, உதவிப்பொறியாளர் முதலமணி ஆகியோரின் சார்பில் அந்த அலுவலகத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றும் சதீஷ்குமாரிடம் ரூ. 10 ஆயிரத்தை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கொடுத்தார்.
அப்போது செயற்பொறியாளர் சங்கர் மளகி, உதவிப்பொறியாளர் முதலைமணி ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் கொப்பள் லஞ்ச ஒழிப்பு படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.