பெங்களூரில் குப்பை பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை குப்பை பிரச்னை குறித்து ஆளும்கட்சித் தலைவர் சிவராஜ், மாமன்ற மஜத தலைவர் நேத்ரா நாராயணனுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூரில் தொடர்ந்து குப்பை பிரச்னை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த மாதம் முதல் குப்பை அள்ளுவதற்கு புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான கொள்கை வகுக்கப்படும். அதைத் தொடர்ந்து அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது வரையறுக்கப்படும். அனைத்து வார்டுகளுக்கும் தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளி வழங்கப்படும். ஒப்பந்தபுள்ளியை பெறும் ஒப்பந்ததாரர்கள், குப்பையை அள்ளுவதற்கு ஒரு ஆட்டோ, ஒரு காம்பேக்டர் வாகனம் வைத்திருப்பது அவசியம்.
ஒப்பந்தப்புள்ளியைத் தொடர்ந்து எந்த வார்டிலும் குப்பை தேக்கமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெங்களூரு நகருக்கு குப்பை நகரம் என்ற பெயரை போக்க அதிகாரிகள் கடினமாக பணியாற்ற வேண்டும் என்றார்.