கர்நாடகத்தில் கல்லூரிகளின் வளர்ச்சிக்கு ரூ. 600 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெகெளடா தெரிவித்தார். மைசூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடக மாநில அளவில் உள்ள அரசு கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகளின் வளர்ச்சிக்கு ரூ. 600 கோடி நிதியை விடுவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதியை சரிசமமாகப் பங்கிட்டு வழங்கப்படும். கல்லூரிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்காதது வேதனை அளிக்கிறது.
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டணி ஆட்சி முழுமையாக நிறைவு செய்யும்: முதல்வர் குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக ஆபரேஷன் கமலா திட்டத்தின் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஜார்கிஹோளி சகோதரர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னரும் ஊடகங்கள் அவர்கள் கூறும் கருத்துகளை திரித்து எழுதுவது முறையல்ல. கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வோம் என்றார் அவர்.