கர்நாடகத்தில் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது என்று அந்த மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
தும்கூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ள கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக என்ன முயற்சி செய்தாலும், கூட்டணி அரசைக் கவிழ்க்க முடியாது. கர்நாடக காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்.
அரசைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் கனவு ஒரு போதும் பலிக்காது. மாநிலத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க., தனது பணியைச் சரிவரச் செய்யாமல், அரசியலில் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி வருகிறது. காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளிடையே எந்தவிதப் பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி வருகிறோம். காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் உள்ளது போல் சூழலை உருவாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. அவர்கள் என்ன முயன்றாலும், அரசு அமைதியாக ஆட்சியை நடத்தும். பா.ஜ.க.வின் ஆசை வார்த்தைகளுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலைபோக மாட்டார்கள் என்றார்.