பாஜகவை விமர்சிக்க முதல்வர் குமாரசாமிக்கு எந்தவித தார்மிக உரிமையும் இல்லை என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் குமாரசாமி, பாஜக மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். பாஜகவினர் மீது குறை கூறுவதற்கு முதல்வர் குமாரசாமிக்கு தார்மிக உரிமை இல்லை. அவரது குடும்பத்தினர் மாநிலத்தில் பரவலாக செய்துள்ள நில அபகரிப்புகளை விரைவில் மக்களிடத்தில் கொண்டு செல்வேன்.இதுதொடர்பான ஆவணங்கள் என்னிடத்தில் உள்ளன.
எதிர்க்கட்சியினரை தவறாக விமர்சிக்க வேண்டாம். மத்தியில் எங்கள் ஆட்சி உள்ளதை மறக்க வேண்டாம். முதல்வரின் கேள்விக்கும், குற்றச்சாட்டிற்கும் தகுந்த பதிலை பாஜக அளிக்கும். முதல்வர் பதவி நிரந்தரமல்ல என்தை உணர்ந்து முதல்வர் குமாரசாமி பேச வேண்டும் என்றார்.