பாஜகவின் அரசியல் நாடகம் மக்களிடம் எடுபடாது என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு கோவிந்தராஜ் சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் கட்சியுடன் தொடர்பில் இல்லை எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை. காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்தவில்லை. ஆனால் மீண்டும் பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜகவினர், பல்வேறு அரசியல் நாடகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் நாடகம் மக்களிடம் எடுபடாது. இதனை பாஜகவினர் உணர வேண்டும் என்றார்.
மேலும் சட்டமேலவையில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் மேயர் பதவிக்கான தேர்தல் செப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் செப். 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைவரின் ஆலோசனையையும் பெற்று இறுதியில் மேயர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.