பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தால் பன்னரகட்டாசாலை, ஜே.பி.நகர், ராஜராஜேஸ்வரிநகர், கொட்டிகெரே, கெங்கேரி, நாகர்பாவி, மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், சதாசிவநகர், கோரமங்களா, ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
திங்கள்கிழமை காலை 6 மணி வரை பெய்த மழையால் வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் பம்புசெட்டுகள் மூலம் வெளியேற்றினர். மழையால் தும்கூரு சாலை, மைசூருசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்ததால், காலை 9 மணி வரை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பலர் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை திங்கள்கிழமை மாலைக்குள் மூடும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால், குழிகளை மூடும் பணி நிறுத்தப்பட்டது. பெங்களூரில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சாலைகளில் ஈரம் காயாமல் உள்ளதால், குழிகளை மூடும் பணியில் தோய்வு ஏற்பட்டது.