மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரில் இரண்டொரு நாள்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதலாக உள்ளது.
கடந்த 2 நாள்களாக பெங்களூரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 2 நாள்களாக மாநகராட்சி தலைமை அலுவலகத்திலேயே அமர்ந்து மழை சேதங்களை கேட்டறிந்த வண்ணம் உள்ளேன். அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அதிகாரிகள், ஊழியர்களை அனுப்பி வைத்து வருகிறேன். திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்த போது, மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கேட்டறிந்தார்.
சாலைகளில் உள்ள குழிகளை மூட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வரை கெடு விதித்திருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் உள்ள குழிகளை மூடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் சாலைகளில் உள்ள குழிகளை மூட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.