மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது என்று துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.கூட்டணிக் கட்சியான மஜதவுக்கு எத்தனை தொகுதிகளை விட்டுத் தரலாம்? காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் போன்றவை குறித்து இக் கூட்டத்தில் ஆராயப்படவிருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி எடுத்திருக்கும் முடிவை மஜதவின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம். அதன்பிறகு, மஜத தலைவர்களுடன் கலந்தாலோசித்து இறுதிமுடிவு எடுக்கப்படும்.
பெங்களூரில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செயல்படுத்த அரசு துரித கதியில் செயல்பட்டுவருகிறது. ஒப்பந்ததாரர் உறுதி சாலை திட்டம், மேம்பாலத் திட்டம், சிமென்ட்சாலை அமைக்கும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. கடந்தாண்டில் இருந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணி முடிந்த பிறகு, புதிய திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.