இதய நோயாளிகளின் சிகிச்சைக்கு இலவச ஸ்டென்ட்டுகள் வழங்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சிறுநீர டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும். இதற்காக ரூ.25கோடி ஒதுக்கப்படும். ஏழை இதயநோயாளிகளுக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி மருத்துவசிகிச்சை அளிக்க இலவச ஸ்டென்ட்டுகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ.4கோடி ஒதுக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஏழைகளுக்கு உதவ ரூ.2கோடி செலவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்படும். தாசப்பா மகப்பேறு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு ரூ.50லட்சத்தில் மேம்படுத்தப்படும்.
கித்வாய் மருத்துவமனையில் இலவச மருத்துவமையத்தை மேம்படுத்த ரூ.5கோடி, ராஜீவ்காந்தி மார்புநோய்கள் மையத்தின் இலவசமருத்துவமையத்தை மேம்படுத்த ரூ.5கோடி அளிக்கப்படும். குடிமக்களின் பொதுநலனுக்காக மக்கள் தொகை அதிகமிருக்கும் பகுதிகளில் ரூ.5கோடிசெலவில் காற்றுதூய்மை கருவிகள் நிறுவப்படும்.
மது,புகை, பிறபோதைப்பொருள்கள் பழக்கத்தில் இருந்து குடிமக்களை விடுக்க நிமான்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2கோடிநிதியுதவி அளிக்கப்படும்.
தாய்மடி திட்டத்துக்கு ரூ.1.5கோடி, கர்ப்பிணிகளுக்கு கால்சியம், இரும்புச்சத்து மாத்திரை அளிக்கும் திட்டத்திற்கு ரூ.25லட்சம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.