பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படும் அன்னபூர்ணேஸ்வரி திட்டத்துக்கு லட்சுமிதேவி திட்டம் என பெயர் மாற்ற வேண்டும் என மாமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எச்.பசவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு சுயமாக தொழில் தொடங்க மாமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அன்னபூர்ணேஸ்வரி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
பின்தங்கிய மகளிர் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், அந்தத் திட்டத்துக்கு பெங்களூரை உருவாக்க தனது உயிரை தியாகம் செய்த கெம்பே கெளடரின் மருமகள் லட்சுமிதேவியின் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதேபோல தும்கூரு சித்தகங்கா பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் பெயரில் கல்வி அமைப்புகளுக்கு விருது வழங்குவதையும், அவரது உருவச்சிலையை வைக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.