மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க பேரம் பேசியதாக எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மஜத எம்.எல்.ஏ நாகன கெளடாவின் மகன் சரண கெளடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, எம்.எல்.ஏ. சிவன கெளடா நாயக் உள்ளிட்டோர் குதிரை பேரம் பேசியதாக முதல்வர் குமாரசாமி, உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்டார். இதில் சட்டப்பேரவைத் தலைவரையும் தொடர்புபடுத்தியிருப்பதால் விசாரணை, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பி.எஸ்.எடியூரப்பா, எம்.எல்.ஏ சிவன கெளடா நாயக், பிரீதம்கெளடா உள்ளிட்ட 4 பேர் மீது ராய்ச்சூரு மாவட்டம் தேவதுர்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு எடியூரப்பா தரப்பிலான வழக்குரைஞர் சி.வி.நாகேஷ், கடந்த பிப்.15-ஆம் தேதி கலபுர்கி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். வெள்ளிக்கிழமை மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.