கோலார்தங்கவயலில் உள்ள பொதுமருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ ரூபகலா திடீர் ஆய்வு நடத்தினார்.
கோலார்தங்கவயல், ராபர்ட்சன்பேட்டையில் அமைந்துள்ள பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை தொகுதியின் எம்எல்ஏ ரூபகலா, திடீரென ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். ஏழை எளிய மக்கள் நம்பியிருக்கும் இந்த பொதுமருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், தகுந்த சிகிச்சை இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரூபகலாவிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
மருத்துவமனையின் வார்டுகள், அனைத்து சிகிச்சை பிரிவுகள், டயாலிசிஸ் மையம் ஆகியவற்றை ரூபகலா ஆய்வு செய்தார். வார்டுகளில் இருந்த கழிவறைகள் சுத்தம், சுகாதாரம் இன்றி இருந்ததைக் கண்டு ரூபகலா அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களிடமும், சிகிச்சைக்காக வந்திருந்த வெளிநோயாளிகளிடமும் சிகிச்சையளிக்கும் விதம் குறித்து விசாரித்து அறிந்தார். அதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றும் மருத்துவர்களின் கூட்டத்தைக் கூட்டி, மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய ரூபகலா, நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், மருத்துவமனையை சுத்தம் சுகாதாரத்துடன் பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.