கர்நாடக ஹிந்து நாடார் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் டி.பாலசுந்தரம், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலர் குருசாமி, துணைச் செயலர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சித்தானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, பொங்கல் விழா நடந்தது. இதன்பின்னர், தனியார் நில மேம்பாட்டாளர்கள் மேம்படுத்தியுள்ள நிலத்தை வாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுவசதியை செய்துதருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, காமராஜர் அறக்கட்டளையின் 42-ஆவது ஆண்டுவிழா, காமராஜர் விழாவில் கலந்துகொண்டோருக்கு பாலசுந்தரம் நன்றி தெரிவித்துகொண்டார்.
இதன்பின்னர், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 16-ஆம் தேதி நடக்கும் பொங்கல் விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற திருமண மேடையில் கிருஷ்ணவேணி வரன்கள் குறித்த தகவல்களை அளித்தார். இறுதியில் சங்க பொருளாளர் சித்தானந்தன் வரவு-செலவு கணக்குகளை சமர்பித்தார். நிறைவாக, துணைச் செயலர் ஜவகர் நன்றி கூறினார்.