நல்லவர்களின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதோடு, அவர்களின் பெயரில் நல உதவிகளை வழங்குவது மனநிம்மதியை அளிக்கிறது என்று கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
கர்நாடக மாநில அதிமுக சார்பில் பொங்கல் விழா, திருவள்ளுவர் விழா, எம்ஜிஆர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் பெங்களூரு பெரியார் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில், 200 பெண்களுக்கு பொங்கல் பரிசாக சேலைகளை வழங்கி, எஸ்.டி.குமார் பேசியது:-
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் இயற்கையை வணங்கும் விழாவான பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
கர்நாடக மாநில அதிமுக சார்பில் முப்பெரும் விழாக்களைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதுபோன்ற நல்லவர்களின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதோடு, அவர்களின் பெயரில் நல உதவிகளை வழங்குவது மனநிம்மதியை அளிக்கிறது.
பொங்கல் விழா எல்லோருடைய வாழ்விலும் இன்பமயமான எதிர்காலத்தை உருவாக வேண்டும். ஜாதி, மத பேதங்கள் மறைந்து சமத்துவச் சமுதாயம் படைப்பதே பெருந்தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் எண்ணப்படி, ஏழைகள் வாழ்வில் நம்பிக்கை ஒளி படரவேண்டும். ஏழைகளுக்கு பசியற்ற, நோயில்லா வாழ்க்கை அமைய வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழகத்தில்நல்லாட்சி வழங்கி வருகின்றனர்.
கர்நாடக மாநில அதிமுக சார்பில் மர்பி டவுனில் ஜனவரி 15-ஆம் தேதி அம்மா பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல்விழா கொண்டாடுவதற்கு பெண்களுக்கு புதுப்பானை, கரும்பு, பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருள்கள் அதிமுக சார்பில் வழங்கப்படுகிறது.
இதேபோல், ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர்நாளை முன்னிட்டு கட்சியின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இதையடுத்து, ஜனவரி 17-ஆம் தேதி சி.வி.ராமன்நகர், சிவாஜிநகர், சாம்ராஜ்பேட்,புலிகேசிநகர், சர்வக்ஞநகர், பிடிஎம் லேஅவுட், ஜெயநகர், சிக்பேட், காந்திநகர், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர் தொகுதிகளில் எம்ஜிஆர் பிறந்தநாள்விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
விழாக்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என்றார்.