கர்நாடகத்தில் பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்று மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை தும்கூரு தேசிய நெடுஞ்சாலை நாகசந்திராவில் 200 படுக்கை வசதி கொண்ட பிரிக்ரியா மருத்துவமனையைத் தொடக்கிவைத்து கையேட்டை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் பின்கதவு வழியாக பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மையில்லை. காங்கிரஸ், மஜத கட்சிகளின் உள்கட்சி பூசலால் கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறமையும், ஒற்றுமையும் இல்லாத கூட்டணி ஆட்சியால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனை மூடி மறைக்க, ஆளும் கட்சியினர், தேவையில்லாமல் பாஜகவை குறைக் கூறி வருகின்றனர்.
எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை மாற்றுக் கட்சியினர் இழுப்பதற்கு வாய்ப்பு தராமல் தடுக்கும் வகையில், தில்லியில் வைத்து பாதுகாத்து வருகிறோம். எனவே, எங்களைக் குறைகூறாமல் அவர்கள் எம்.எல்.ஏக்கள் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சுகாதாரமான நாட்டை உருவாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. எனவே, அனைவருக்கும் சிகிச்சை கிடைக்கும் வகையில் அதிக அளவிலான மருத்துவமனைகளைத் தொடங்க தனியார்கள் முன்வர வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் கணேஷ், மருத்துவர்கள் பிர்காஷ் ராமசந்திரா, சீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.