இந்திரா உணவகம் குறித்த பாஜக விமர்சனம்: மேயர் கண்டனம்
அரசியல் ஆதாயம் தேடவை இந்திரா உணவகம் குறித்து பாஜகவினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது கண்டனத்துக்குரியது என மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.
பெங்களூரு பத்திரிகையாளர் சங்கத்தில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கோவிந்தராஜ்நகர் வார்டு பாஜக உறுப்பினர் உமேஷ் ஷெட்டி திங்கள்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திரா உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும், விஷத்தன்மை கலந்துள்ளதாகவும், அதற்கான ஆதரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மக்களிடத்தில் இந்திரா உணவங்கள் குறித்த தவறான கருத்து பரவியுள்ளது. அவர் சோதனை செய்த உணவுகளை எங்கிருந்து எடுத்துச் சென்றார். எதன்மூலம் எடுத்துச் சென்றார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்புள்ள பதவியில் உள்ளவர், உணவுகளை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சட்டத்திற்குள்பட்டு அவர் மீது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்திரா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகளை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சோதனை செய்து அறிக்கை தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சியிலிருந்த போது ஏழைகளின் பசியைப் போக்க, குறைந்த விலையில் உணவை வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார். அது சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதை சீர்குலைக்க பாஜக மாமன்ற உறுப்பினர் உமேஷ்ஷெட்டி முயற்சி மேற்கொண்டுள்ளது வருதத்தை அளிக்கிறது என்றார்.
பேட்டியின் போது முன்னாள் மேயர்கள் மஞ்சுநாத்ரெட்டி, ஜி.பத்மாவதி, மாநகராட்சி ஆளும்கட்சித் தலைவர் அப்துல்வாஜித், முன்னாள் ஆளும்கட்சித் தலைவர்கள் சத்தியநாராயணா, ரிஸ்வான், மாநகராட்சி மஜத கட்சியின் தலைவர் நேத்ரா நாராயண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.