பெங்களூரு வளர்ச்சிக் கழகத்தில் மாற்று வீட்டுமனைத் திட்டத்தில் ரூ. 600 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக நிர்வாகியும், முன்னாள் மாநகராட்சி ஆளும் கட்சித் தலைவருமான என்.ஆர்.ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இதற்கான 688 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை வெளியிட்டு அவர் பேசியது: பெங்களூரு வளர்ச்சிக் கழகம் சார்பில் உருவாக்கப்படும் வீட்டுமனைகள், முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ள பயனாளிக்கு ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை பல்வேறு காரணங்களால் பயனாளிகள் விரும்பவில்லை என்றால், அவர்களின் கோரிக்கை ஏற்று மாற்று வீட்டுமனைகள் ஒதுக்கப்படுவது வாடிக்கை.
மாற்று வீட்டுமனைத் திட்டத்தை பயன்படுத்தி, பெங்களூரு வளர்ச்சிக் கழகத்தின் ஆணையராக பதவி வகித்த ஷியாம்பட்டின் துணையோடு, ஹனுமந்தே கெளடா என்பவர் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூ. 600 கோடி மதிப்பிலான 245 மாற்று வீட்டுமனைகளை பெற்றுள்ளார். இதில் மாபெரும் ஊழல் நடைபெற்றதற்கான ஆவணங்கள் என்னிடத்தில்
உள்ளன.
எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி ஊழலுக்கு காரணவர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக லோக் ஆயுக்த, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.