சென்னையில் கடன் தொல்லை காரணமாக, கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை ஷெனாய்நகர் வெங்கடாசலபதி தெருவைச் சேர்ந்தவர் செ.கிருஷ்ணவேல் (50). மனைவி உமா (40). மகள் கீர்த்தி (17). கிருஷ்ணவேல் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
தொழில் தேவைக்காக கிருஷ்ணவேல் வட்டிக்குக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள், அதைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணவேல் திங்கள்கிழமை நள்ளிரவு எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை கீர்த்தி தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, தனது தந்தை கிருஷ்ணவேலும், தாய் உமாவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையின் காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.