கிழக்கு தாம்பரத்தில் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடும்போது மாணவி இறந்ததற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த லூயிஸ் தேவராஜ் மகள் மஹிமா (18), மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாண்டு மாணவி. கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளும் கட்டாயமாக ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்பததற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, கூடைப்பந்து விளையாட்டில் மஹிமா சேர்ந்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை கல்லூரி மைதானத்தில் கூடைப்பந்து விளையாடும் போது திடீரென அவர் மயங்கி விழுந்து, மாரடைப்பினால் இறந்தார். இது குறித்து சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
இச் சம்பவம் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி மஹிமா இறப்பை கண்டிக்கும் வகையிலும், கட்டாயமாக விளையாட்டில் மாணவ-மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்ற திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டதால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.