சென்னை அருகே பொழிச்சலூரில் தொழிலதிபரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பொழிச்சலூர் சிவசங்கரன் நகரைச் சேர்ந்தவர் கங்கா (எ) சுரேஷ் (35). இவர் கட்டடப் பணிக்குத் தேவையான ஜல்லி, செங்கல், மணல் ஆகியவற்றை லாரிகள் மூலம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு வந்த 3 மர்ம நபர்கள், அவரது வீட்டின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசினர். பெட்ரோல் வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் வீட்டின் முன்புறம் இருந்த பொருள்கள் தீப் பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு சுரேஷ், வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அப் பகுதி மக்களும் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சுரேஷ், சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுரேஷூக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால், அந்த தகராறின் காரணமாக இச் சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.