சொத்துப் பிரச்னை காரணமாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் அமர்ந்து இருந்த தாய் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த சகோதரி தலையில் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேட்டையைச் சேர்ந்தவர் முத்தம்மா (77). இவருக்கு விஜயலஷ்மி (55) உள்பட 3 மகள்களும், தேவராஜ் ( 53) உள்பட இரு மகன்களும் உள்ளனர். முத்தம்மாவுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேவராஜ் தனது தாய் முத்தம்மாளை வீட்டில் வைத்து பராமரிக்காத நிலையில் அவருக்கு தாய் முத்தம்மா சொத்தில் பங்கு கொடுக்கவில்லை.
இது தொடர்பாக செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்குத் தொடர்ந்தார்.
முத்தம்மா செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி, மகன் தேவராஜூக்கு எதிராக சாட்சியம் அளித்தாராம். பின்னர் கோவூரில் உள்ள மகள் விஜயலட்சுமி வீட்டுக்குச் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையம் வந்த முத்தம்மா, மகளுடன் பேருந்தினுள் ஏறி அமர்ந்து இருந்தார்.
அப்போது அரிவாளுடன் அங்கு வந்த தேவராஜ், தாய் முத்தம்மாவை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் முத்தம்மா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தடுக்க வந்த அவரது சகோதரி விஜயலட்சுமியின் தலையில் வெட்டி விட்டு தப்பியோட முயன்ற தேவராஜை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்தனர்.
பலத்த காயமடைந்த விஜயலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.