சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டவாறு ஆய்வு செய்தார்.
சென்னை மெரீனா கடற்கரையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அங்கு ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, மெரீனா கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் ஒரு மாதத்துக்கு அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மாநகராட்சி ஆணையர் ஆய்வு: இதையடுத்து, மெரீனா கடற்கரையில் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை காலை அதிகாரிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டவாறு ஆய்வு நடத்தினார்.
இதில், மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட கடைகள், இலவச பொதுக் கழிப்பிடம், மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இணைப்புச் சாலையில் ரூ.47 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள், மெரீனா பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் மீன் கடைகûள் ஆகியவற்றை ஆணையர் தா.கார்த்திகேயன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்தராவ், துணை ஆணையர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.