சென்னை புதுப்பேட்டையில் குதிரை உதைத்ததில் காவலரின் கண் பார்வை பறிபோனது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன் (27). இவர் சென்னை பெருநகர காவல் துறையின் குதிரைப் படையில் காவலராக பணிபுரிகிறார். அவர் குதிரைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார். வழக்கம்போல் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை குதிரைக்கு பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த குதிரை திடீரென எட்டி உதைத்தது. இதில் மணிகண்டனின் இடதுகண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது இடது பக்க தாடையும் உடைந்தது.
இதைப் பார்த்த பிற காவலர்கள், மணிகண்டனை மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சுமார் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும் அவரது இடது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. மேலும் அவருக்கு தாடையும் உடைந்திருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.