மனைவி கழுத்தறுத்துக் கொலை: கணவர் தற்கொலை முயற்சி

சென்னை சைதாப்பேட்டையில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


சென்னை சைதாப்பேட்டையில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை குன்றத்தூர் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் பு.கார்த்திக் (38). இவரது மனைவி சௌமியா (34). இத்தம்பதிக்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் (10), 3-ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வின் (8) என இரு மகன்கள் உள்ளனர். கார்த்திக்கும், சௌமியாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். கார்த்திக், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அண்மை நாள்களாக கணவர்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த சௌமியா, அங்கிருந்து மேற்கு சைதாப்பேட்டை துரைசாமி தோட்டம் 2-ஆவது தெருவில் வசிக்கும் தனது தந்தை சேகர் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் கார்த்திக், தனது மனைவி சௌமியாவை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல புதன்கிழமை காலை 7 மணியளவில் அங்கு வந்தார். கார்த்திக், சௌமியாவிடம் தனியாக ஒரு அறையில் சமாதானம் பேசிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், அந்த அறையில் இருந்து திடீரென சௌமியாவின் அலறல் சத்தம் வருவதை கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், அந்த அறைக்கு ஓடி வந்தனர்.
அப்போது கார்த்திக், சௌமியாவின் கழுத்தை ஒரு கத்தியால் அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அங்கேயே சௌமியா உயிரிழந்தார். கார்த்திக் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர்கள், சைதாப்பேட்டை போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சௌமியா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கார்த்திக், சௌமியாவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியபோது தகராறு ஏற்பட்டதும், தகராறு முற்றியதால் அங்கு கிடந்த ஒரு கத்தியை கார்த்திக் எடுத்து, சௌமியாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com