சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக, பிரபல மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள படப்பையைச் சேர்ந்தவர் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரி ஞானவேல். இவர், தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமசாமி (49) நடத்தி வந்த சீட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடி சீட்டில் சேர்ந்து, பணம் செலுத்தி வந்தார்.
ராமசாமி, இராவணன் என்ற பெயரில் மசாலா நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு அந்த சீட்டு முதிர்வடைந்துவிட்ட நிலையில், அதற்குரிய பணத்தை ராமசாமி வழங்கவில்லையாம்.
பணத்தை பலமுறை ஞானவேல் கேட்டும், ராமசாமி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஞானவேல், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து சேலையூரில் ராமசாமியை புதன்கிழமை கைது செய்தனர்.