கஜா புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கோட்டூர்புரம், பெசன்ட் நகர், வேளச்சேரி, எழும்பூர், கிண்டி, தேனாம்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
கடல் சீற்றம்: சென்னை மெரீனா, எண்ணூர், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலலை ஒரு மீட்டர் வரை உயர எழும்பியது. இதனால் வியாழக்கிழமை மாலை மெரீனா கடற்கரைக்கு வந்த பொதுமக்களை திரும்பிச் செல்லும்படி, போலீஸார் அறிவுறுத்தி அனுப்பினர்.
அதேபோல், பட்டினப்பாக்கம் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் கொந்தளிப்பை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.