சென்னை பள்ளி மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாடுகளைக் கண்டறிய அந்தந்தப் பள்ளி மாணவர்கள் மூலம் குழுக்கள் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியது:-
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 280 பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம். எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். ஆசிரியர்கள் இந்தக் குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வர். மாணவர்கள் அளிக்கும் தகவல்களைப் பொருத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை என்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கவுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.