சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) முதல் சனிக்கிழமை வரை (நவ.24) வரை ஒரு வாரத்துக்கு தேசிய இயற்கை மருத்துவ தின விழா கொண்டாடப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணவாளன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய இயற்கை மருத்துவ தின விழாவின் தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.18) காலை 10.30 அளவில் பொதுமக்களுக்கான சூரிய ஒளி சிகிச்சை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, இயற்கை மருத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மனிதச் சங்கிலி, கருத்தரங்கு, இலவச இயற்கை உணவுகள் வழங்கப்பட உள்ளன.
தொடர்ந்து, இரண்டாம் நாளான திங்கள்கிழமை (நவ.19) இயற்கை மூலிகை உணவு சிகிச்சை, செவ்வாய்க்கிழமை (நவ.20) மண் குளியல் சிகிச்சை, புதன்கிழமை (நவ.21), நிற சிகிச்சை, வியாழக்கிழமை (நவ. 22) நீர் சிகிச்சை, வெள்ளிக்கிழமை (நவ.23) அக்குபஞ்சர், ஆற்றல் மருத்துவ சிகிச்சை, சனிக்கிழமை (நவ.24) மசாஜ் சிகிச்சை ஆகியவை அளிக்கப்படும். மேலும், நோய்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். பங்கேற்போருக்கு இந்த சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும்.