மாநிலத் தேவைக்காக தனியாரிடம் 1,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான அனுமதியை மின்சார வாரியம் கோரியுள்ள நிலையில், அதற்கான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: நடப்பு ஆண்டில் செப்டம்பர் முதல் வரும் 2019 -ஆம் ஆண்டு மே மாதம் வரை, நாள்தோறும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்து, அதற்கான அனுமதியை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் கோரியது.
இதை ஆராய்ந்த ஒழுங்குமுறை ஆணையம் தனியாரிடம் இருந்து அதிக காலத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்குமாறு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியது. இதையடுத்து திருத்திய மனுவை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமர்ப்பித்தது. இதைக் கடந்த அக்டோபர் மாதம் ஆய்வு செய்த ஆணையம், தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான அவசியம் குறித்த கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் முதல் வரும் ஆண்டு மே மாதம் வரை நாள்தோறும் 1,000 மெகாவாட் மின்சாரமும், உச்சபட்ச மின்தேவை ஏற்படும் போது, கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரமும் வாங்க வாரியம் அனுமதி கோரியது.
அப்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.29 மற்றும் ரூ.5.40 என்ற விலைகளில் கிடைத்ததாகவும், அந்த விலைக்கு மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியது.
மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள காலம் மிக அதிகமாக இருந்ததால் அதை ஆணையம் ஏற்கவில்லை. பின்னர் வரும் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆணையத்திடம் மின்சார வாரியம் அனுமதி கோரியது.
இதை விசாரித்த ஆணையம் மின் உற்பத்திச் சந்தையில் அதன் விலை குறைந்துள்ள நிலையில் முதலில் தெரிவித்த விலை நிலவரம் தற்போதைய சூழலுக்கு ஏற்புடையதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி அது தொடர்பாக கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யுமாறு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.