சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித்தகுதி உடையவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும், அவரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கும் மிகாமலும் இருத்தல் வேண்டும். இந்தத் தகுதி உடையவர்கள், சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை சென்னை சாந்தோமில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப் பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சாந்தோமில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே உதவித் தொகை பெற்றுவரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண், உதவித் தொகை எண், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்