சென்னை பரங்கிமலை ரயில் விபத்து குறித்து எலக்ட்ரிக்கல் பொறியாளரிடம் செப்டம்பர் 22 -ஆம் தேதி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு ஜூலை 24 -ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையினான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக, விபத்து நடந்த ரயிலின் கார்டு, ஓட்டுநர், கடற்கரை, கிண்டி, பரங்கிமலை ஆகிய ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோரிடம் கடந்த 8 -ஆம் தேதியும், இரண்டாம்கட்டமாக ரயில் இயக்க அதிகாரி, தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரிடம் கடந்த 15 -ஆம் தேதியும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ரயில்வே எலக்ட்ரிக்கல் பொறியாளரிடம் செப்டம்பர் 22 -ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது, கேபிள் துண்டிப்பு மற்றும் மின்சார ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: விபத்து நடைபெற்ற மின்சார ரயிலில் பயணிகள் படியில் தொங்கிக் கொண்டு சென்றபோது, கார்டு எச்சரிக்கை செய்து இருக்கலாம் என்று பயணிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.