சென்னை காசிமேட்டில் கேஸ் நிரப்பும் மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசிமேடு ஒய்.எம்.சி.ஏ.குப்பம் முதல் தெரு அருகே ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்பும் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இங்கு கேஸ் நிரப்பும் மையம் அமைக்கக் கூடாது என ஏற்கெனவே அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, அங்கு கியாஸ் நிரப்பும் மையம் திறக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதி மக்கள் திடீரென கேஸ் மையத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.