சென்னை புளியந்தோப்பில் தண்ணீர் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.
திரு.வி.க. நகர், தணிகாசலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பா.கோபி (21). மென்பொருள் பொறியாளரான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர், தனது தோழி கொடுங்கையூர் காந்தி நகரைச் சேர்ந்த ரா.சர்மிளாவுடன் (23) மோட்டார் சைக்கிளில் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் புதன்கிழமை சென்றார்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை கோபி முந்த முயன்றபோது அவர் திடீரென பிரேக் பிடித்ததில், பின்னால் வந்த தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சர்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த கோபி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தண்ணீர் லாரி ஓட்டுநர் ஆ.தண்டபாணியை (44) கைது செய்தனர். இறந்த சர்மிளா, அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.