சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.14 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வாய்முக புனரமைப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன்கூடிய வாய்முக புனரமைப்பு சிகிச்சை மையம், திசைத் திருப்பல் கருவி, மாணவர் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றின் திறப்பு விழா, ரத்த தான முகாம், கல்லூரிக்கான புதிய பேருந்து தொடக்க விழா ஆகியவை கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், வாய்முக புனரமைப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.14 கோடி மதிப்பில் முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் வாய்முக புனரமைப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முக எலும்புகளில் உள்ள தேய்மானம், மாதிரி வடிவம் போன்றவற்றை அறுவை சிகிச்சைக்கு முன்பே கணித்து மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். ரூ.30 லட்சம் மதிப்பில் நடமாடும் பல் மருத்துவ வாகனம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.
இவ்விழாவில் மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.