இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்று மாநில அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 130 தனியார் நிறுவனங்களும் 10-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்குபெற்று, பணியாளர்களை தேர்ந்தெடுத்தன.
இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது,
கடந்த ஆண்டுகளில் 5 லட்சம் பேர் அரசு வேலை பெற்றுள்ளனர், தற்போது 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடத்தப்பட்ட 2-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வரும் நாள்களில், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் தமிழக பொருளாதாரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
2011முதல் தற்போது வரைஅரசு ஏற்பாடு செய்த முகாம்கள் மூலம் 2,70,146 பேர் தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர். இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்து, இதுவரை 5,46,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் பட்டதாரிகள் வரையிலான 9336 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 2584 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 1384 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 1447 பதிவுகள் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட 49 மாற்றுத்திறனாளிகளில் 29 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர் என்றார்.
மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.