நெல்லை விரைவு ரயிலில் வந்த பெண் பயணியின் 70 பவுன் நகை மாயமானது. இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியில் வசிப்பவர் கருப்பசாமி. இவரது மனைவி விசாலட்சுமி(37). இவர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு நெல்லை விரைவு ரயிலில் திங்கள்கிழமை இரவு புறப்பட்டனர். ரயிலின் எஸ்-8 பெட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களில் படுத்து தூங்கினர். ரயில் தாம்பரத்தை செவ்வாய்க்கிழமை காலை கடந்து மாம்பலம் ரயில்நிலையத்தை அடைந்தபோது, ரயிலில் இருந்து இறங்குவதற்காக விசாலட்சுமி தனது இருக்கைக்கு கீழே வைத்திருந்த கைப் பைகள், பெட்டிகளை எடுத்தனர். அப்போது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். எங்கு தேடியும் அந்த சூட்கேஸை காணவில்லை, அந்த சூட்கேஸில் 72 பவுன் நகை இருந்தது. இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸில் விசாலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.