சென்னை நொளம்பூரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயிலின் உள்பகுதியில் உலோகத்தினாலான 11 சுவாமி சிலைகளை மர்ம நபர் வைத்து விட்டு சென்றுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நொளம்பூரில் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் துப்புரவுப் பணியாளர் லட்சுமி என்பவர் திங்கள்கிழமை காலை கோயிலின் உள்பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, உற்சவருக்கு அலங்காரம் செய்யும் இடத்தில் ஒரு பையில் 11 சிறிய சிலைகள் இருந்ததை கண்டார். இது தொடர்பாக கோயில் பொறுப்பு அதிகாரியான சக்தி என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அவர் அங்கு வந்து அந்த சிலைகளை பார்த்தார். ஒவ்வொரு சுவாமி சிலையும் முக்கால் அடி உயரத்தில் இருந்தது. இதையடுத்து, கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்த்தார். ஒரு மர்ம நபர் கோயிலுக்குள் நுழைந்து, கைப்பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து நொளம்பூர் போலீஸில் சக்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.