சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தேசியக் கொடிக்காக 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் 75 முக்கிய ரயில் நிலையங்களில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் பெரிய அளவில் தேசியக்
கொடியை பறக்க விட வேண்டுமென ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் தேசிய கொடி கடந்த 15 ஆம் தேதி பறக்கவிடப்பட்டது.
ஏற்கெனவே, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றப்பட்டது. அதைப்போல, எழும்பூர் ரயில் நிலையத்திலும் 100 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கம்பத்தைச் சுற்றி பீடம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
ரூ.15 லட்சம் செலவில் பணிகள்: இந்த தேசிய கொடி மற்றும் கம்பத்துடன் நிறுவுவதற்கு ரூ.15 லட்சம் செலவிடப்படுகிறது. 24 மணி நேரமும் தேசிய கொடி பறக்கும் வகையில் கம்பத்தின் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடி கம்பம் 2 டன் எடை கொண்ட இரும்பு குழாயால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடியின் அளவு 30 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்டது. மேலும், இந்த கொடி 9.5 கிலோ எடை கொண்ட துணியால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
100 அடி உயர கம்பத்தில் பெரிய அளவிலான தேசிய கொடியை ஏற்றுவதற்கான அனைத்துப் பணிகளும் வரும் 10 நாள்களில் முடிந்துவிடும். அதன்பிறகு, தேசிய கொடியை உயர் அதிகாரிகள் ஏற்றி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.