வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக சுகாதாரத் துறைக்கும் இதுகுறித்த மின்னஞ்சல் கிடைத்திருப்பதாகவும், விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாக மத்திய அரசு அதில் குறிப்பிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் திட்டமிட்டபடி போலியோ முகாம்களை நடத்த இயலாத சூழல் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொடர் நடவடிக்கைகளால் கடந்த 15 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் நிகழாண்டில் பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது சில காரணங்களுக்காக போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.