பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைப் போராடத் தூண்டியதாக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அதை ஆபாச விடியோ எடுத்து மிரட்டி வந்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணித் தலைவர் என்.அஸ்வத்தாமன் உள்பட 4 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தனர். அவர்கள், கல்லூரி நுழைவு வாயில் முன் நின்று கொண்டு பொள்ளாச்சி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டினார்களாம். இதைப் பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற கீழ்ப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பையா மற்றும் காவலர்கள், அவர்களை தட்டிக் கேட்டனராம்.
உடனே அஸ்வத்தாமனும், அவருடன் வந்தவர்களும் போலீஸாரை மிகவும் தரக்குறைவாகத் திட்டி, மிரட்டல் விடுத்தனராம். இதனால் இரு தரப்புக்கும் இடையே அங்கு சிறிதுநேரம் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது குறித்து உதவி ஆய்வாளர் சுப்பையா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் அஸ்வத்தாமன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.