தலைக்காய விழிப்புணர்வு தினத்தை ஒட்டி சென்னையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற 50 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டன. முன்னதாக, விழிப்புணர்வு தினத்தின் ஒரு பகுதியாக நெல்சன் மாணிக்கம் சாலையில் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறியது:
போக்குவரத்து காவல்துறை தகவல்படி கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 790 பேர் விபத்தில் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இரு சக்கர வாகன ஓட்டிகள். உயிரிழப்புகளுக்கு தலைக்கவசம் அணியாததே முக்கியக் காரணம். தலையில் காயம் ஏற்படுவது நேரடியாக மூளையைப் பாதிப்பதற்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கு ஒரு சாலை விபத்து நேரிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தலைக்கவசம் அணிவதும், அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்று தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், காவல் துறை துணை ஆணையர் கே.பிரபாகர், எம்ஜிஎம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் கே.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.